மணப்பாடு கடலில் மேலும் ஒரு மீனவர் உடல் மீட்பு

by Staff / 09-10-2023 12:16:47pm
மணப்பாடு கடலில் மேலும் ஒரு மீனவர் உடல் மீட்பு

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி. ஆரோக்கியம் (50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில்  மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ(47)பங்குத்தாரராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி  கே. ஆரோக்கியம்(52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ்(54)உள்பட 16 தொழிலாளர்கள்  கடந்த 25 ம் தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28 ம் தேதி  நள்ளிரவு ஆன்றோ, கே. ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராமல் திடீரென விசைப்படகு ஒரு பக்கமாக சரிந்து கடலில் மூழ்கியது. உஷாரான மீனவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள உடனே கடலில் குதித்தனர். கடலில் குதித்த மீனவர்கள் கரையை நோக்கி நீந்தி தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை பார்த்ததும், அருகில் சென்று அவர்களை மீட்டது. இதில்  13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாயமான 3 மீனவர்களை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில்   கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30 ம் தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே. ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் அவர்கள்  குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக விசாகப்பட்டணத்திலிருந்து  கப்பற்படை கப்பல் நேற்று மணப்பாடு கடல் பகுதிக்கு சென்றது.
பின்னர் வீரர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒருவரது உடல் மீட்கப்பட்டது. இந்த உடல் யார்? உடல்  என்று உடனே அடையாளம் காணமுடியவில்லை. இந்த உடல் விசைப்படகு மூலமாக குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு  இன்று(திங்கள்கிழமை)காலை கொண்டுவரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மீட்கப்பட்ட உடலை காண குளச்சல் துறைமுகத்தில் உறவினர்கள் திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே யாருடையா? உடல் என தெரிய வரும். ஒருவேளை பிரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாவிட்டால். டி. என். ஏ. சோதனை மூலம் அடையாளம் காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via