கொரோனா பரவல் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. சில தளர்வுகளை அளிப்பதற்காக காத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிப்பு அதிகரித்த காரணத்தால் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தார். அதோடு, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளித்தார்.
அதன் படி சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைவாகவே இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன என்றும் தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags :