உயரும் தில்லி எம்எல்ஏக்களின் ஊதியம்: புதிய ஊதியம் எவ்வளவு?

ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் மாத ஊதியமாக ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.54 ஆயிரம் பெறுகின்றனர். இதில் ஊக்கத்தொகையாக ரூ. 30 ஆயிரமும் ஊதியமாக ரூ.12 ஆயிரமும் அடங்கும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் திருத்தப்பட்ட ஊதியத்திற்கு ஒப்புதல் அலிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊக்கத்தொகையானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாகவும், ஊதியம் ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஊக்கத்தொகையுடன் சேர்த்து மாத ஊதியமாக ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர்.
தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படாத நிலையில் நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய ஊதியமானது உத்தரபிரதேசத்தில் ரூ.95,000 ஆகவும், தெலுங்கானாவில் ரூ.2,50,000 ஆகவும் , உத்தரகண்டில் ரூ .1,98,000 ஆகவும், ஹரியாணாவில் ரூ..1,55,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :