தமிழகம் முழுவதும் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்- 4 ஆயிரம் பேர் கைது
குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், 5 வேன்கள், 3 லாரிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் குட்கா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குடோன்கள், கடைகள், வணிக வளாகங்களில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 ஆயிரத்து 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டலத்தில் 1,367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய மண்டலத்தில் 257 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 260 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் 1,154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,119 பேர் சிக்கியுள்ளனர்.
தெற்கு மண்டலத்தில் 691 வழக்குகளில் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகரில் 5 வழக்குகளில் 10 பேரும், கோவை மாநகரில் 41 வழக்கில் 42 பேரும், திருப்பூரில் 71 வழக்குகளில் 73 பேரும், திருச்சியில் 70 பேரும் கைதாகி உள்ளனர்.
சென்னையில் 343 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 357 பேர் கைதாகி இருக்கிறார்கள். குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், 5 வேன்கள், 3 லாரிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags :