உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு மகளிர் அணி பாடுபட வேண்டும்- மாநில செயற்குழுவில் தீர்மானம்

by Admin / 06-08-2021 03:54:18pm
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு மகளிர் அணி பாடுபட வேண்டும்- மாநில செயற்குழுவில் தீர்மானம்



விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு மகளிர் அணி பாடுபட வேண்டும் என்று மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடந்தது.

 இதில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய மகளிர் அணி செயலாளர் சுப்ரீத் கவுர் வந்தார். அவரை அலுவலக வாசலில் மகளிர் அணியினர் திரண்டு நின்று வரவேற்றனர்.

அதை தொடர்ந்து கூட்ட அரங்கில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு மாநில தலைவி மீனாட்சி நித்யசுந்தர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் நெல்லையம்மாள், மோகனப் பிரியா, பொருளாளர் பிரமிளா சம்பத், சென்னை மாவட்ட தலைவிகள் லதா, ஜெய்ஸ்ரீ, ஆஷா, ஹேமலதா, மீனாட்சி உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவி மீனாட்சி பேசும்போது, ஒரு காலத்தில் நாம் தேர்தலில் பங்கெடுப்பதே சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது நமது எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டசபைக்கு சென்றார்கள். தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via