மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது
அவரப்பாளையம் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை ஆகிறது. இந்தப் பகுதியில் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் வரை பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளின் அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே வாலிபர் ஒருவர் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ஜெயக்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது.
அவர் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், அவரப்பாளையம் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை ஆகிறது. இந்தப்பகுதியில் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் வரை மனு அனுப்பியுள்ளோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மதுபானக்கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றனர்.
Tags :