ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல்:  தங்கம் வென்றார்  நீரஜ் சோப்ரா

by Editor / 07-08-2021 05:49:10pm
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல்:  தங்கம் வென்றார்  நீரஜ் சோப்ரா


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 86.59 மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. கடந்த 1900 ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் கடைசியாக இந்தியா பதக்கம் வென்றிருந்தது. நார்மன் பிட்சர்ட் 200 மீ. மற்றும் 200 மீ. தடை ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

அதன்பின் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கைகூடவில்லை. இதனால் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகனின் கனவாக இருந்தது.


இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதல் வாய்ப்பில் 87.03 மீ. தூரம் வீசி அசத்தினார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவுக்குச் சவால் அளிக்கக்கூடிய ஜெர்மனியின் வெட்டர் 82.52 மீ மட்டுமே வீசினார். ஜெர்மனியின் வெபர் ஜூலியன் 85.30 மீ தூரம் வீசினார்.

இதனால் முதல் சுற்றில் நீராஜ் சோப்ரா தான் முதலிடம் வகித்தார். 2-வது வாய்ப்பில் இன்னும் அதிகமாக 87.58 மீ. தூரம் வீசி இந்திய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் 76.79 மீ. தூரம் வீசினார்.


அதிக தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, கடைசி மூன்று சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதில் 12 வீரர்களில் முதலில் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டுமே போட்டியிட்டார்கள். இதில் வெட்டர் இடம்பெறவில்லை. வெஸ்லி 85.44 மீ. தூரம் வீசி 2-ம் இடம் பிடித்தார். முதல் மூன்று சுற்றுகளில் அதிகபட்சமாக 87.58 மீ. தூரம் வீசி நீரஜ் சோப்ரா முதலிடம் வகித்தார்.


4-வது மற்றும் 5-வது சுற்றுகளில் வீசியபோது நீரஜ் சோப்ரா கோட்டைத் தாண்டியதால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 5-வது சுற்றின் முடிவிலும் நீரஜ் சோப்ரா தான் முன்னிலை வகித்தார்.


இறுதியில் அனைத்து வீரர்களை விடவும் அதிக தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
இதையடுத்து இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது.

 

Tags :

Share via