ராஜபாளையத்தில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்.

by Editor / 28-05-2024 11:47:30pm
ராஜபாளையத்தில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்.

விருதுநகர் - தென்காசி  ரயில் பிரிவில் மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் ஒரு பணிமனை ரூபாய் 1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 24) துவக்கி வைக்கப்பட்டது. இது மதுரை கோட்டத்தில் 12வது ரயில் பெட்டியாகும். இந்த பணிமனையில் ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின்தடை பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம்  ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும். இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரயில் ஓட்டுனர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன. ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஹைட்ராலிக் ஏணியில் உள்ளது. 

 

Tags : ராஜபாளையத்தில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்

Share via