சென்னையிலுள்ள 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Editor / 12-08-2021 08:22:58pm
சென்னையிலுள்ள 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் மூன்று தினங்களில் 74-வது சுதந்திர தினம் கோலகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், தமிழ்நாடு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றவுள்ளனர். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றுவார்கள். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றுவார்கள்.

கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும். சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் தியாகராய நகர் உட்பட 6 தனியார் ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகர் தனியார் ஹோட்டல் உட்பட 6 ஹோட்டல்களில் நடைபெறக்கூடிய வேலைவாய்ப்பு முகாமில் வெடிகுண்டு வெடிக்க போவதாக அந்த தனியார் ஹோட்டலின் இமெயிலுக்கு குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக காவல் ஆணையர் இமெயிலுக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் இமெயில் வந்த ஐடியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

 

Tags :

Share via