பலன்  தரும் பைரவர்  வழிபாடு

by Editor / 15-08-2021 05:30:36pm
பலன்  தரும் பைரவர்  வழிபாடு

 

பைரவரை வழிபாடு செய்வதற்குரிய சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற அஷ்டமி தினங்கள் உள்ளன. இதில் "வளர்பிறை அஷ்டமி " தினத்தில் விரதம் இருந்து பைரவரை வழிபடுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் .
மாதந்தோறும் வருகிற அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்றவைகளுக்கு பிறகு எட்டாவது திதியாக வருவது அஷ்டமி தினமாகும்.


இதில், வளர்பிறையில் வருவது "வளர்பிறை அஷ்டமி" தினம் என்றும், தேய்பிறை காலங்களில் வருவது "தேய்பிறை அஷ்டமி" தினம் என்றும் அழைக்கப்படுகிறது.


வளர்பிறை அஷ்டமி தினத்தில் அஷ்டலட்சுமிகளும் தங்களின் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக, அத்தினத்தில் வரும் ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்து பலனடைந்ததாக பைரவ புராண வரலாறு கூறுகிறது.
வளர்பிறை அஷ்டமி தினம் அதிகாலையில் எழுந்து, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் சாப்பிடாமல் பைரவருக்கு விரதம் இருக்க வேண்டும்.


மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயிலுக்கு சென்று ஸ்ரீ பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காயை உடைத்து, அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.


வளர்பிறை அஷ்டமி தினத்தன்று, ராகுகாலத்தில் பைரவரை வழிபாடு செய்யும் வரை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
உடல்நலம் குன்றியவர்கள், உணவு சாப்பிட முடியாது இருப்பவர்கள் பழங்கள், நீராகாரம் போன்றவற்றை உணவாக எடுத்து கொள்ளலாம்.

"அஷ்டம்" என்றால் "எட்டு" என்று பொருள். எட்டு என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த எண்ணாகும். எனவே வளர்பிறை அஷ்டமி தினத்தில் விரதமிருந்து வழிபடுவதால் சனி பகவானின் அருளாசிகளும் நமக்கு கிடைக்கிறது.
ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகத்தை படித்து வரலாம்
ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!
ராகு காலத்தில் அருகில் இருக்கும் சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது பைரவர் சந்நிதிக்கு சென்று, பைரவருக்கு 108 நாணயங்கள் வைத்து, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரத்தை 27 முறை கூறி வழிபாடு செய்வது நல்லது.
வழிபாடு முடிந்ததும் அந்த 108 நாணயங்களை தொழில், வியாபாரங்கள் செய்யும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் கொஞ்சம் நாணயங்களை போட்டு வைக்க வியாபாரம் பெருகி பெருமளவு லாபங்கள் கிடைக்கும். பொன் சேர்க்கை உண்டாகும்.

வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும்போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானதை தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.
வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும்போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
பைரவ மூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால் பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் நீங்கும்.


பகைவர்களும் நண்பர்களாவார்கள். பைரவ சகஸ்ர நாமத்தை தொடர்ந்து பாராயணம் செய்வதால் துன்பங்கள் நீங்கி மிகுந்த பலன் கிடைக்கும்.ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் விரதம் மற்றும் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும், யோகங்களும் கிடைக்கும் என்று பைரவாஷ்டகம் தெரிவிக்கிறது.
ஆடி வளர்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ பைரவரை வழிபடுவதால், சூரிய, சந்திர கிரகங்கள் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கும்.உங்களையும், உங்கள் வீட்டையும் பிடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.


நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும்.லட்சுமி கடாட்சம் பெருகும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீண் பண விரயங்கள் குறைந்து, செல்வ சேர்க்கை அதிகரிக்கும். பித்ரு சாபங்கள், குல தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

 

Tags :

Share via