திரை உலகில் சாதனை படைத்த விஜயகாந்த்  (ஆக.25 பிறந்த நாள் )

by Editor / 24-08-2021 05:57:04pm
  திரை உலகில் சாதனை படைத்த விஜயகாந்த்  (ஆக.25 பிறந்த நாள் )

 

விஜயகாந்த், தான் நடித்த இரண்டாம் படத்தில்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’ (1979 டிசம்பர் 4). அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. படத்தின் கதைப்படி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர், தேர்தலில் நின்று வெல்வார். மதுரை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவரது குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்துவிடுவார்கள்.இறுதியில் இதை அறிந்த விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று. இந்தப் படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது என்று தோன்றுகிறது.


‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர். இதே சுதாகர், ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயப் பிறவி’யில் காமெடி வில்லனாக நடித்தார்.


அடுத்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’தான் விஜயகாந்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகப்படமான இது, அடிப்படையில் பழிவாங்கும்தன்மையிலானது. சங்கர் கணேஷ் இசையில் ஒலிக்கும் ‘தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்’ பாடல் அந்தக் காலக் காதல் இன்னிசையின் பெருமையை இன்றும் காதோடு காதாகச் சொல்லிவருகிறது. இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘அந்தா கானூன்’ படத்தின் மூலமாகத்தான் ரஜினிகாந்த் இந்திப் படவுலகில் நுழைந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘ஓம் சக்தி’, ‘சாட்சி’, ‘நீதியின்மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் இவர் நடித்தார்.


ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் செஞ்சட்டை நாயகனாக நடித்த, ‘சிவப்பு மல்லி’ தான் விஜயகாந்தை ஏழைகளின் வேந்தனாக்கியது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக இவரை மாற்றியது. 


சந்திரசேகருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் அநேகமாக இயக்குநர் இராம நாராயணன்தான். ‘சிவப்பு மல்லி’ தொடங்கி, ‘சபாஷ்’, ‘தண்டனை’, ‘கரிமேடு கருவாயன்’, ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மு.கருணாநிதியின் வசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் பேசி நடித்துள்ளார்.


விஜயகாந்தின் தொடக்க காலத்தில் பெரும்பாலான படங்களுக்கு சங்கர் கணேஷ்தான் இசையமைத்தார். 
ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்திய, அவரைப் பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’. 


இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அநேகமாக அது விஜயகாந்த் அறிமுகமாகும்போதாக இருக்கலாம், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானதொரு படம் ‘வெற்றி’. இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றி பெறுபவராக விஜயகாந்த் நடித்தார்.


1984 தீபாவளி நாளில்தான் விஜயகாந்தின் பெரிய வெற்றிப்படமான ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளியானது. வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை நினைவூட்டும் இந்தப் படத்தில் பரிமளம் என்றொரு நடிகை விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வேடமேற்றிருந்தார். அதன் பின்னர் அவரை எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. இந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமும் இதைப் போலவே பெரிய வெற்றியைப் பெற்றது.

இளையராஜாவின் இசையிலான பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. இதே போல் பாடல்களுக்குப் பெயர்பெற்ற விஜயகாந்தின் இன்னொரு படம் கே.ரங்கராஜ் இயக்கிய ‘நினைவே ஒரு சங்கீதம்’.சிறுமுகை ரவி இயக்கிய ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது. பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. 


இருபது படங்களுக்கும் மேலாகக் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்துள்ளபோதும் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. வழக்கமான வசனங்களை அள்ளி வீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் விஜயகாந்த் தந்திருப்பார். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்.


விஜயகாந்தின் நூறாம் படம் ‘கேப்டன் பிரபாகரன்’. படத்தின் பெயரே அவரது தமிழாதரவு நிலையைச் சொல்லும். பொதுவாக நூறாம் படம் பெரிய நடிகர்களுக்குக் காலைவாரிவிடும் என்பது தமிழ்த் திரைப்பட வரலாறு. ஆனால், இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது புதிய வரலாறு. விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுடன் ‘வீரபாண்டியன்’ படத்திலும், பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்திலும் விஜயகாந்த் இணைந்து நடித்துள்ளார்.


கா.நீ.மா.நீ. படத்தில் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ பாடலை மீண்டும் பயன்படுத்தியிருப்பார்கள். இவர் நடித்து, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த ‘கூலிக்காரன்’ படத்தில் முதலில் நடிப்பதற்காகப் பேசப்பட்டவர் ரஜினிகாந்த்தாணுவின் இயக்கத்தில் ‘புதுப்பாடகன்’ படத்தில் பின்னர் அவருக்கு நடித்துக் கொடுத்தார். தமிழின் முதல் முப்பரிமாணப் படமான ‘அன்னை பூமி’யில் இவரும் நளினியும் நடித்திருந்தார்கள்.


எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் இவர். நடிகை வடிவுக்கரசிக்காக ‘அன்னை என் தெய்வம்’, நடிகர் சரத்குமாருக்காக ‘தாய்மொழி’ எனத் தன்னைப் போன்ற சக நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த். இளம் இயக்குநர்களை உற்சாகப்படுத்தியதில் இவருக்கு நிகரான ஒரு நட்சத்திரம் இல்லவே இல்லை.


‘சிறைப்பறவை’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ (இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது இவருக்குக் கிடைத்தது), ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட வெற்றி நாயகன் விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவோம் .

 

Tags :

Share via