மதுரையில் கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி - உறவினர்கள் 3 பேர் கைது

by Admin / 25-08-2021 05:11:26pm
மதுரையில் கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி - உறவினர்கள் 3 பேர் கைது

 

 

மதுரையில் வேலை வாங்கி தருவதாக கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்த உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பொன்மேனி டிஎஸ்பி நகரை சேர்ந்தவர் கவிதா பிரியா (வயது 35). இவர் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் ராஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் எனது கணவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை விற்று எனக்கு கிடைத்த ஒரு கோடி பணம் என்னிடம் இருந்தது.

நான் 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் முத்துலட்சுமி, அவரது மகள் நாகஜோதி,குரு கண்ணன், கார்த்திக், மீனா ஆகியோர் எனது பணத்தை மோசடி செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் என் வீட்டில் தங்கி என் குழந்தைகளை தாய்போல பார்த்துக்கொள்வதாக நடித்தனர்.

அப்போது என்னிடம் உள்ள பணத்தை அபகரிக்கும் நோக்கில் எனக்கும், எனது சகோதரி, அவரது கணவருக்கும் இந்தியன் ஆயில், ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முதலாவது ரூ.30 லட்சத்தை பெற்றுக் கொண்டனர்.

பின்னர் தாங்கள் ஜவுளி தொழில் செய்வதாகவும் அந்த தொழிலை விரிவு படுத்துவதற்காகவும் பல தவணைகளில் ரூ. 65 லட்ச ரூபாய் வாங்கினார். பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பணத்தை தராமல் இழுத்தடித்தனர்.

ஒருகட்டத்தில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். பணத்தை திருப்பி கேட்ட போது எனது 2 பெண் குழந்தைகளையும், என்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

எனவே இவர்களிடம் இருந்து எனக்குரிய ரூ.95 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். மோசடி செய்த முத்துலட்சுமி, அவரது மகள் நாகஜோதி மற்றும் குரு கண்ணன், கார்த்திக், மீனா ஆகியோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரித்தனர். இதையடுத்து ரூ. 95 லட்சம் மோசடி செய்த முத்துலட்சுமி நாகஜோதி குருகண்ணன் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via