தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது-கே.பி.முனுசாமி. 

by Staff / 13-07-2025 05:12:09pm
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது-கே.பி.முனுசாமி. 

கிருஷ்ணகிரி ரத வீதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் தலைமையில் ஏராளமான அமுமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக உடனடியாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்பொழுது தேர்தல் கிடையாது. தற்பொழுது தேர்தல் வர இருக்கிறது அதன் காரணமாக தான் ஸ்டாலின் அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு பரிந்துரைத்துள்ளார்.


இந்த விஷயத்தில் விஜய் கூறியதில் எந்தவித தவறான கருத்தும் இல்லை அவர் சரியாக தான் கூறியுள்ளார். ஸ்டாலின் எப்பொழுதும் மத்திய அரசுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார். வெளியில் செல்லும் பொழுது வீரனைப் போல் பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தில் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்கிறார். இதைப் பார்த்து ஸ்டாலின் பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக மற்றும் பாமக கட்சிகளை பாஜக தான் உடைக்கிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய கருத்துக்கு பதில் அளித்தஅவர் , “இந்த கருத்தை கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லாதவர் செல்வப்பெருந்தகை, அவர் பாரம்பரிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கிடையாது. காங்கிரஸ் கட்சி நூறாண்டுகளில் பல நேரங்களில், பல சந்தர்ப்ப, சூழ்நிலைகளில் உடைந்து சிதறி இன்று இந்தியா முழுவதும் பல மாநில கட்சிகள் உருவாக காரணமாக இருந்தது.

காரணம் காங்கிரஸ் கட்சியில் வலுவுள்ள தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால் தான் கட்சி பல சூழலில் உடைந்து சிதறியது. ஏதோ ஒரு சூழலில் எங்கோ இருந்த செல்வப்பெருந்தகை காங்கிரஸில் சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த கருத்துக்களை கூற எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து அமித்ஷா கூறுவது தான் வேத வாக்கு என மத்திய இணைய அமைச்சர் வேல்முருகன் கருத்துக்கு பதில் அளித்தவர், அதிமுகவை பொறுத்தவரை கட்சியின் கொள்கை, மற்றும் மக்களின் தீர்ப்பு இரண்டும் தான் வேத வாக்காக நினைக்கிறோம். கட்சி கூட்டணி என்பது வேறு தேர்தல் முடிந்த பின்பு ஆட்சி அமைப்பது என்பது வேறு. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது.

இதை பாஜகவின் தலைவர் நேரடியாக சென்னைக்கு வந்து தெரிவித்துள்ளார். இதனிடையே பல்வேறு கருத்துக்கள் வரலாம் அதற்கு பதில் கூற வேண்டிய சூழல் தற்போது இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் கூறுவது தான் எங்களுக்கு வேத வாக்கு. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்வோம் என எங்கள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம் என தெரிவித்தார்.

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்தவர், திமுக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நேரடியாக பதில் கூற முடியாததாலும் பாஜகவை இழுக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து என்பது அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டும் பொழுது மூலதன செலவோடு அது நின்று விடாது, தொடர்ச்சியாக ஆசிரியர் நியமனம் உள்கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட தொடர் செலவுகள் ஏற்படும்.

அறநிலையத்துறை நிதியிலிருந்து இந்த தொடர் செலவுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியுமா என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்புகிறார். அவர் கல்லூரி ஆரம்பித்ததை குறை கூறவில்லை உடனடியாக திமுகவினர் அதை திசை திருப்பி தங்களை காப்பாற்றிக்கொள்ள முயல்கின்றனர். அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் கொண்டு வந்தோம் அதன் தொடர் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது.

அந்த செலவுகளை நிதி நிலை அறிக்கையில் கொண்டு வந்தோம். ஆனால் அறநிலைய துறையில் கொண்டு வரக்கூடிய கல்லூரிகளுக்கு நிதி நிலையை எங்கு சேர்ப்பார்கள். மீண்டும் தொடர் செலவுகளுக்கு அறநிலைய துறையை தான் அணுக வேண்டும். கோவிலுக்கு நிரந்தரமான வருவாய் என்பது இருக்காது. இந்த அடிப்படையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அந்த கேள்வியை முன்வைத்தார். அதிமுக கல்லூரிகளை கொண்டு வந்ததன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே உயர்கல்விக்கு செல்வோரின் நிலையை 2018 ஆம் ஆண்டு 54 விழுக்காடு உருவாக்கி கொடுத்தோம் என தெரிவித்தார்.

 

Tags : BJP has joined the alliance led by AIADMK in Tamil Nadu - K.P. Munusamy

Share via

More stories

Logo