பிரேமலதா பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் - நீதிமன்றம்

by Editor / 01-09-2021 07:37:20pm
பிரேமலதா பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் - நீதிமன்றம்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது கடந்த 2017ஆம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆனால், அதனை அவர் மறைத்துவிட்டதாக கூறி பாஸ்போர்ட் அலுவலர் பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை சில மாதங்களுக்கு முன் திரும்ப பெற்றுக்கொண்டார்.

சூழல் இப்படி இருக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தார். ஆனால், அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் துபாய் செல்வதில் சிக்கல் உருவானது

இதை எதிர்த்து, பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்பு இன்று (செப். 1) விசாரணைக்கு வந்தது. பிரேமலதா சார்பில் மூத்த வழக்கறிஞரும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆஜரானார்.

அப்போது வாதிட்ட அவர், "திருநெல்வேலி காவல் துறையால் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை. இவ்வழக்கு தொடர்பாக எந்தத் தகவலையும் எங்கள் தரப்பில் மறைக்கவில்லை.

பிரேமலதாவின் கணவர் விஜயகாந்த் சிகிச்சையின்போது உடனிருந்து உதவ வேண்டியுள்ளது. எனவே, பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். பிரேமலதா மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறோம். எங்கும் தப்பி ஓட மாட்டோம்" என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதேசமயம், குற்ற வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அலுவலரிடம் தெரிவிப்போம். எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போர்ட் அலுவலரிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

 

Tags :

Share via