நைரோபியில் பெய்த கனமழை- வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42
கென்யாவின் தலைநகரான நைரோபியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 42 ஆக உயர்ந்துள்ளது என கென்ய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. நைரோபியில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில்வெள்ளம் புகுந்ததால் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மொம்பசா கடற்கரை நகரத்திற்குத் திருப்பி விடப்பட்டன.உயிரிழந்தவர்களில் பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளதாக நைரோபி காவல்துறை தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதிபர் வில்லியம் ரூட்டோவின் உத்தரவின் பேரில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவ கென்ய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்து உடல்களை மீட்கும் பணிகளில் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.நகரின் முக்கிய சாலைகளான மொம்பசா சாலை மற்றும் உகுரு நெடுஞ்சாலை ஆகியவை நீரில் மூழ்கின. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சேதமடைந்தும் காணப்படுகின்றன
Tags :


















