எந்த ஒரு நாடும் எங்களை  கட்டுப்படுத் த முடியாது:தாலிபான்கள்

by Editor / 21-09-2021 03:37:50pm
எந்த ஒரு நாடும் எங்களை  கட்டுப்படுத் த முடியாது:தாலிபான்கள்

 

20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது தற்காலிக ஆட்சியை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியே ஆப்கானிஸ்தானில் 90% பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் முன்னாள் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.

மேலும், அமெரிக்க ராணுவ படைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு ஆப்கானை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும் என தாலிபான் அறிவித்தது. தாலிபான் ஆட்சி பிடிக்காத மக்களும் தரை மற்றும் விமானங்கள் மூலம் உலக நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கு மிகவும் ஆனந்தமடைந்து வாழ்த்து கூறிய நாடு பாகிஸ்தான். அதோடு, தாலிபான்களின் கருத்தை பாகிஸ்தான் பிரபலித்தது என்று தான் கூற வேண்டும்.

தற்போது தற்காலிக ஆட்சி அமைத்துள்ள தாலிபான்கள் அடுத்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியான முறையில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தாலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்தாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் இம்ரான் கான், 'இப்போது முழு ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கைபிடியில் தான் உள்ளது. ஆப்கானில் வலுவான முறையில் தாலிபான்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

அப்போது தான் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நாட்டில் அமைதி நிச்சயமாக நிலவும். ஆனால், இதில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும்.

ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் உற்று நோக்கி வருகிறது. இது உலகின் மிகப்பெரிய மனிதநேய நெருக்கடி ஏற்படும். அகதிகள் பிரச்சினை உருவெடுக்க வழிவகுக்கும்' எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த அறிவுரையை முன் வைத்து பேசிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹீத், 'தாலிபான்களுக்கு என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

நாங்கள் இப்படித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று யாரும் எங்களை கட்டுப்படுத்த முடியாது' என கடுப்பாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via