நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

by Editor / 23-09-2021 04:03:41pm
 நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்


பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐந்து வாரங்களுக்கு மேலாக மீராமிதுன் சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.


அதனை தொடர்ந்து, நண்பர் சாம் அபிஷேக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாம் பட்டியலினத்தை சேர்ந்தவர் தான். அவரது பெற்றோர் பட்டியல் இனத்தவர் தான். இவர்கள் கிறிஸ்தவ மதம் மாறிவிட்டார். மேலும் இவர் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு சமுதாயம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி இவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் 5 வாரங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும் இருவரும் ரூ.10,000 இரு நபர் பிணை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மறு உத்தரவு வரும் வரை இருவரும் காவல் நிலையத்தில் 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தலைமறைவாக கூடாது என்று கூறி, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via