கோவில்பட்டி  ஹோட்டலில் சாப்பிடும்போது சிரித்ததால் மோதல், சூறை 

by Editor / 23-09-2021 06:44:28pm
கோவில்பட்டி  ஹோட்டலில் சாப்பிடும்போது சிரித்ததால் மோதல், சூறை 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் எதிரே தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. புதன் இரவு  வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் அங்கு உணருவருந்தியுள்ளனர். அதேபோல் கிருஷ்ணா நகரை சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோரும் அருகில் உணவருந்தியுள்ளனர். அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இந்த ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம் என்பதால் அங்கு பணிபுரியும் ஊழியருடன் சிரித்துப் பேசியுள்ளனர். அப்போது அருகில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பார்த்துதான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து, அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தங்களை பார்த்து ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டுள்ளனர். உங்களை பார்த்து சிரிக்கவில்லை என்று அருண்குமார் நண்பர்கள் கூறியுள்ளனர். இல்லை எங்களை பார்த்து தான் நீங்கள் சிரித்தீர்கள் என்று பிரசாத் நண்பர்கள் கூற இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சாப்பிட்டதற்கு பில் கொடுத்துவிட்டு கிளம்ப முயன்றுள்ளனர். ஆனால் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் வந்து எங்களை பார்த்து எப்படி சிரிக்கலாம், எப்படி பேசலாம் என்று கூற இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் ஹோட்டலில் இருந்த நாற்காலி, தண்ணீர் செம்பு, குழம்பு வாளி என அனைத்தையும் எடுத்து வீசி ஒருவர் ஒருவரை தாக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் ஹோட்டல் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க போலீசார் விரைந்துவந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via