அக்டோபர் 3 ந்தேதி 4–வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Editor / 01-10-2021 03:33:05pm
அக்டோபர் 3 ந்தேதி 4–வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் நான்காவது மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

” தமிழ்நாட்டில் நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் (அக்டோபர் 3) ஆம் தேதி நடைபெறும். நம்மிடம் 24.98 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 20 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி முகாம்களின்போது நான்கைந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன்.

அதுபோன்று இந்த வாரம் தேனி, திண்டுக்கல், சிவங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் ஆய்வு மேற்கொள்வார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றபோது முதலமைச்சர் பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த வகையில், தடுப்பூசி முகாம்கள் மிக சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது.

ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதத்தில்தான் அதிகப்படியான தடுப்பூசிகள் மக்களை சென்றடைந்துள்ளது. அதற்கு காரணம் மெகா தடுப்பூசி முகாம்கள்தான்” என்று கூறினார்.

முன்னதாக அக்டோபர் 3ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றும் அதனை ஈடுசெய்யும் வகையில் அக்டோபர் 10ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தார் 

 

Tags :

Share via