திண்டுக்கல் அருகே மின்சாரம்  தாக்கி தந்தை, 2 மகன்கள் பலி

by Editor / 01-10-2021 03:36:48pm
திண்டுக்கல் அருகே மின்சாரம்  தாக்கி தந்தை, 2 மகன்கள் பலி



திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பலியானார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகில் உள்ள செட்டியபட்டி மடப்புரம் காளிகோவில் அருகே வசித்து வந்தவர் திருப்பதி (வயது 43). இவரது மனைவி வசந்தா (40). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு விஜயகணபதி (17), சந்தோஷ் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.


விஜயகணபதி 11-ம் வகுப்பும், சந்தோஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வந்தது.  மனைவி வசந்தா வேலைக்கு சென்று விட்டார்.


திருப்பதி தனது மகன்களை பள்ளிக்கு செல்வதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மின்சார வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக, மழையினால் சுவர் ஈரமாக இருந்தால், சுவர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை அறியாமல், திருப்பதி மின்சாதன பெட்டியில் சுவிட்சை போட்டபோது திடீரென மின்சாரம் தாக்கியது.


இதனால் திருப்பதி பயங்கர சத்தம் போட்டு கீழே விழுந்தார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு மகன்கள் விஜயகணபதி, சந்தோஷ் ஆகியோர் வேகமாக ஓடி வந்து அவரை தூக்க முயன்றனர். அப்போது அவர்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. அவர்களில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் (40) மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகியோர் ஓடி வந்து மின்சாரம் தாக்கி விழுந்து கிடந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.


பின்னர் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்த திருப்பதி மற்றும் அவரது மகன்கள், முருகன், சூர்யா ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே திருப்பதி மற்றும் அவரது 2 மகன்களும் உயிரிழந்தனர். முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via