100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: பிரதமர் மோடிதகவல்

by Editor / 21-10-2021 03:15:02pm
100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: பிரதமர் மோடிதகவல்

‘‘நாட்டு மக்களுக்கு 100 கோடி கோவிட் (கொரோனா) தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (21 ந்தேதி) சாதனை படைத்துள்ளது’’ என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு கூறியுள்ளார்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த பணி வெற்றிகரமாக அமைய உதவிபுரிந்த சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.


டெல்லி செங்கோட்டை யில் நடந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி மான்சுக் மன்டாவியா, 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட பாடலை வெளியிட்டார். மேலும் இது சம்பந்தமான பட காட்சிகள் கொண்ட வீடியோவும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதையும் அவர் வெளியிட்டார்.இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியது. இதனையடுத்து தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இதன்பலனாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தையடுத்து மக்களுக்கு போடும் பணி கடந்த ஜனவரி 16 ந்தேதி துவங்கியது.


முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்பின்னர் பிப்ரவரி 2-ந்தேதி முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று மக்களுக்கு ஒரே நாளில் 2.5 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது.இந்தியாவில் இதுவரை 99 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அதில் முதல் டோஸ் ஊசியை 70 கோடியே 56 லட்சம் பேரும். 2-வது டோஸ் தடுப்பூசியை 29 கோடியே 28 லட்சம் பேரும் போட்டு இருந்தனர்.


இந்தியாவில் 9 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடி தடுப்பூசி தவணைகளை எட்டியது. அதன்பிறகு உலகிலேயே இந்தியா தான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவில் போட்டுள்ளதை விட இரு மடங்கு ஜப்பானில் போட்டுள்ளதை விட 5 மடங்கு, ஜெர்மனியில் போட்டுள்ளதைவிட 3 மடங்கு, பிரானசில் போட்டுள்ளதைவிட 10 மடங்கு அதிகமாக இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo