சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்தகவல்

அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவுக்கு உரிமை இல்லை என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், இந்த வழக்கை தொடர்வதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும் டெல்லி உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
அதே போல அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும் கட்சியும் சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் அதனை உறுதி செய்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் இதை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதம் இன்று முடிவடையாத காரணத்தால், இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags :