சபரிமலையில் 2036-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு

by Editor / 07-12-2021 11:55:43am
சபரிமலையில் 2036-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் படிபூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாடு மாலை நேரத்தில் புஷ்பாபிஷேகம் முடிந்த பின்னர் நடைபெறும்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
 
கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் சபரிமலை கோவிலுக்கு செல்ல தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 40 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பேரும் சபரிமலை செல்லலாம்.

கோவில் நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் தரிசனம் செய்ய  40 ஆயிரத்து 620 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 30 ஆயிரத்து 117 பேர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் படிபூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாடு மாலை நேரத்தில் புஷ்பாபிஷேகம் முடிந்த பின்னர் நடைபெறும். இதனை கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நேரில் நடத்துவார். சன்னிதானத்திற்கு செல்லும் 18 படிகளிலும் விளக்குகள் ஏற்றி, மலர்களால் அலங்கரித்து பூஜை நடைபெறும். இந்த பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த வழிபாட்டை காண அனுமதிக்கப்படும். அதன்படி வருகிற 2036-ம் ஆண்டு வரை இப்பூஜைக்கான முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது படிபூஜை தினமும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

சபரிமலையில் 2036-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு
 

Tags :

Share via