வேலையை விட்டுத் தானே ஓய்வு பெற்றோம்?

by Editor / 11-12-2021 12:17:58pm
வேலையை விட்டுத் தானே ஓய்வு பெற்றோம்?

ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு ஆண்டவனால் ஆசீர்திக்கப்பட்டு தரப்படும் நேரம்.

நான் நிறைய பார்த்திருக்கிறேன், ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறி விடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்தி விடுவார்கள்..

நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பிக் காதலித்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும். இல்லையா? பிடித்தது போல் நல்ல அழகாய் உடை அணியுங்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள்,ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும் வரை வேலைக்குப் போகலாம் என்று,கையில் அதிகம் காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு தொடர்வதை மட்டும் என்னால் பார்க்க முடிகிறது

அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை. மீண்டும் இந்தப் பணத்தை சேர்க்க யாருக்காக துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால் தான் சோறு என்ற வாழ்க்கை.. சிலருக்கு  / பலருக்கு  சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, இருந்தாலும் அந்தப் பணத்தை நோக்கி துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். ஓய்வுக்குப் பின் நமக்கான வாழ்க்கையை இனியாவது வாழ்வோம் என்று கொஞ்சமும் இல்லாமல்.

உங்களுக்குப் பிடித்த, வேலையை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். உங்களுக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை, கட்டுரை, ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.

இதுவரை ஓடிய நாட்களில் பார்க்க முடியாத இடங்களைப் பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு  நேரத்துக்கு நன்றாகத் தேவையான செரிமானம் ஆகக்கூடிய  உணவை சாப்பிடுங்கள்.

கொஞ்சம் நம்முடைய பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள்,இதில் அவர்கள் பேசவே செய்வதில்லை நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம்.

அதிகாலையில் எழுந்திருங்கள். வாய் விட்டு நிறைய சிரியுங்கள். உங்கள் ஒத்த நண்பர்களோ, பிடித்த, கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது மறக்காமல் எல்லாவற்றையும் பேசுங்கள் அல்லது அவர்களை நேரில் சந்தியுங்கள் .

மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள். அப்படி இருந்தால் நம் துக்கம் ஒன்றுமில்லை என்று நமக்குத் தெரியும்.

மெடிகல் செக்அப்புகளை விடாதீர்கள், நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நம் நண்பர்கள்,நம் உறவினர்கள் எங்கோ ஒருவர் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று ஒருபோதும் பயப்படாதீர்கள். அந்த லிஸ்ட்  நம்மிடம்  இல்லை.

டாய்லெட் கதவுகளை பூட்டிக் கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக் கொள்ளுங்கள்.

தெரியாதவர்களுக்கு கதவைத் திறக்காதீர்கள்.
சேர்த்து வைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பி விடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி தரக் கூடியவர்களுடன்  விளையாடுங்கள். உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.

வேலையை விட்டுத் தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய் விட்டோம் இல்லையே அப்புறம் ஏன் கவலைப் படுகிறீர்கள்?

இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்துத் தான்..

ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும்... அவர்களின் ஓய்வில் எவ்வித மனஉளைச்சலும் ஏற்படுத்தாத வகையில்.., பெற்றோர்களின் உடல், மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.

வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்... பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமைதாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது...

இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுயநலத்திற்காக இழக்காதீர்கள்.

சிறிது நேரம் தியானம்  செய்யுங்கள் நல்லது இனிதே நடக்கும். நீங்கள் விரும்பும் இயற்கை/  இறைவனிடம் உங்களை ஒப்படைத்து விட்டு உங்கள் பணியை செய்து கொண்டே இருங்கள். நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியத்தை இயற்கை / இறைவன் கொடுப்பான்.
 

 

Tags :

Share via