திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை போன சம்பவத்தில் திடீர் திருப்பம்- ரயில்வே ஊழியரே கொள்ளை அடித்துவிட்டு நாடகமாடியது அம்பலம்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் புகுந்து ஊழியர் டீக்கா ராம் என்பவரை கட்டிப்போட்டு நேற்று ₹1.32 லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில், திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டீக்காராம் முன்னுக்குப்பின், முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் போலீஸ் பாணியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, ரயில்வே ஊழியர் தனது மனைவி சரஸ்வதியை அதிகாலை 4மணிக்கு வரவழைத்து தன்னை கட்டிப்போட வைத்துவிட்டு, கொள்ளை கும்பல் கட்டிப்போட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையின்போது, ஊழியர் டீக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் அதிக அளவு கடன் ஏற்பட்டதாகவும், அதனால் தான் இந்த பணத்தை கொள்ளையடிக்க இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர் டீக்காராம் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவரையும் கைது செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூபாய் 1.32 லட்சத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :