மழலையை தூங்கவைப்பது எப்படி ..?

by Editor / 23-02-2022 11:31:36pm
மழலையை  தூங்கவைப்பது எப்படி ..?

குழந்தைகளைத் தூங்க வைப்பதுதான் அம்மாக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கும். இரவு முழுவதும் முழித்துக் கொண்டு அம்மாவைத் தொந்தரவு செய்யும் குழந்தைகளும் உள்ளார்கள். அவர்களைத் தூங்க வைத்துப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதிலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் என்றால் இன்னும் சிரமம். இரவு முழுவதும் குழந்தைகளுடன் போராடி அவர்களைத் தூங்க வைத்து விட்டுப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் விடிந்து விடும். எனவே, குழந்தைகளைத் தூங்க வைத்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தூக்கத்தை மேற்கொள்கிறார்களா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது 4 மாத குழந்தைகள் முதல் ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமையாகும்.

1. குழந்தையின் தூக்கம் தூங்குவதற்குக் கூறிய நேரம் வந்துவிட்டால் அதைக் குழந்தைகளுக்கு உணர்த்தும் விதத்தை நீங்கள் முதலில் தொடர வேண்டும். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு மூன்று முறைகளைப் பின்பற்றி வருகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது குழந்தைகளைக் குளிக்க வைத்துத் தூங்க வைப்பது, உணவு கொடுத்துத் தூங்க வைப்பது மற்றும் பாடல் பாடி தூங்க வைப்பது இந்த முறைகளைத் தான் பின்பற்றி வருகிறார்கள். மற்றும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மசாஜ் செய்தும், நல்ல மென்மையான இசை கொண்ட ஒலிகளை இசைத்தும் தூங்க வைக்கிறார்கள். இவற்றில் எது உங்கள் குழந்தை தூங்குவதற்கு உதவி செய்கிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். அதனைப் பின்பற்றி குழந்தைகளைத் தூங்க வையுங்கள்.

2. அமைதியான சூழல் குழந்தைகள் தூங்குவதற்கு முதலில் அமைதியான சூழலை உருவாக்குங்கள். எப்படி சில இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் அமைதியான சூழலில் தூங்க விரும்புகிறார்களோ அதே போல் குழந்தைகளும் அமைதியான சூழலில் தூங்குவதைத் தான் எதிர் பார்க்கிறார்கள். எனவே குழந்தைகள் தூங்குவதற்கு அமைதியான, இரைச்சல் இல்லாத இடத்தை தேர்வு செய்யுங்கள். மேலும் குழந்தைகள் தூங்கும் மெத்தைகள் உறுதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அத்துடன் குழந்தைகள் தூங்கும் அறை மிகப் பெரிய வசதியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சரியான வெப்பநிலை மற்றும் காற்றோற்றத்துடன் இருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகள் உறங்கும் போது இரவில் அறை இருட்டாக இருக்கக் கூடாது. ஒரு குறைந்தபட்ச ஒளி வீசும் மின்விளக்காவது இருக்க வேண்டும்.

3. மகிழ்ச்சியான வயிறு உண்மை என்னவென்றால் வயிறு நிறைந்து விட்டால் தானாகவே தூக்கம் வந்துவிடும். ஆரோக்கியமான தூக்கத்திற்கு முதலில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்க வேண்டும். அப்படி வயிறு நிரம்பி விட்டால் குழந்தை நீண்ட நேரம் நிம்மதியாகத் தூங்குவார்கள். குழந்தைகள் நிம்மதியாக அழாமல் தூங்க வேண்டுமென்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லது ஒரு டப்பா பால் கொடுத்து குழந்தையை உறங்க வைக்கலாம்.

 

Tags :

Share via