கட்டணம் பாக்கி காரணமாக வகுப்பறை வாசலில் நிற்கவைத்ததால் மாணவி தற்கொலை 3 பேர் மீது வழக்கு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி-சித்ரா. தம்பதிகளின் 3-வது மகள் சுபாஷினி (வயது 19) . இவர் பாப்பாக்கோவில் உள்ள ஐசக் நியூட்டன் தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கல்லூரி முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு நெருங்கி வருவதால் கல்லூரி நிர்வாகம் பணம் கட்டாத மாணவிகளை உடனடியாக மீதமுள்ள கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சுபாஷினிநேற்று காலை வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டு ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஐசக் நியூட்டன் கல்லூரியில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் நாகூர் காவல் நிலையத்தில் ஐசக் நியூட்டன் கல்லூரியின் தாளாளரும், நாகை ஊர்க்காவல் படை மண்டல தளபதியான ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமிகாந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி ஆகிய மூவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : Student commits suicide over 3 students for standing in classroom door due to outstanding fees