திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை துவக்கம்

by Editor / 24-04-2022 07:48:54pm
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை துவக்கம்

 பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு உள்ளூர் தயாரிப்புகளை விற்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்த ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே மதுரை ரயில் நிலையத்தில் கைத்தறி பொருட்கள் மற்றும் சுங்கடி சேலை விற்பனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 8 வரை பனை பொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டியில் தயார் செய்த மிட்டாய், அல்வா, பனம் பழ ஜூஸ், பனையோலை பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன . இதற்காக ஏற்கனவே "ஒரு நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை துவங்க விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க மதுரை ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனையை ஊக்கப்படுத்த ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்தில் மின்சார வசதியுடன் இலவசமாக ரயில் பயணிகள் பார்வையில் படும்படியான முக்கிய இடத்தை வழங்குகிறது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட விருப்ப மனுக்களிலிருந்து திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பனை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு  தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை (24.4.2022) அன்று பழைய பொருட்கள்  விற்பனையை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் துவக்கியது. இந்த நிகழ்ச்சியில் பனைப் பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் செயலாளர் கற்பகவிநாயகம், திருநெல்வேலி நிலைய மேலாளர் முருகேசன், வர்த்தகத் துறை ஆய்வாளர்கள் நடராஜன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வர் விற்பனையை ரயில் பயணிகள் ஆச்சிரியமாக பார்வையிட்டு பனை பொருட்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

 

Tags : Start of sale of palm products at Tirunelveli Railway Station

Share via

More stories

Logo