கள்ளக்காதலுக்காக தம்பியை கொலைசெய்ய திட்டம் தீட்டிகொடுத்த சகோதரி.

by Staff / 03-06-2022 11:55:02am
கள்ளக்காதலுக்காக தம்பியை கொலைசெய்ய திட்டம் தீட்டிகொடுத்த சகோதரி.

திண்டுக்கல் மாவட்டம் குடை பாரப்பட்டியைச் சேர்ந்த சூர்யா(24) என்பவர் கடந்த சில நாட்களுக்கு ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சூர்யாவின் சித்தி மகள் மனிஷா (25) பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி அவர் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவரின் பரிசோதனையில் மனிஷா எந்த மருந்தையும் உட்கொள்ளவில்லை என தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மனிஷாவின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் மனிஷா பேகம்பூரைச் சேர்ந்த சர்தார் என்ற வாலிபருடன் பேசி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. மனிஷாவுக்கு சில ஆண்டுகள் முன்பு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து மனிஷா தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மனிஷாவுக்கு சர்தாருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் மனிஷாவின் உறவுக்கார தம்பியான சூர்யாவுக்கு தெரிய வரவே அவர் அக்காவை கண்டித்துள்ளார். தம்பி கண்டித்த விஷயத்தை மனிஷா சர்தாரிடம் கூற அவர், தனது நண்பர்களை வைத்து சூர்யாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி ,சம்பவத்தன்று சூர்யாவை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். தம்பியை வெட்டிய விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மனிஷா தற்கொலை செய்துகொண்டதை போல நாடகமாடியது அம்பலத்துக்கு வந்தது. இந்நிலையில், போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட சர்தார், கவுதம், ரியாஸ், யோகராஜ், மனிஷா மற்றும் வேறொரு உறவுக்கார பெண் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கண்டித்த தம்பியை சகோதரியே போட்டுத்தள்ள திட்டம் தீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo