கோவில்பட்டி பைக் மீது கார் மோதல் - காவலர்; மற்றும் அவரது 4வயது மகன் பலி

by Editor / 28-06-2022 08:26:00am
கோவில்பட்டி பைக் மீது கார் மோதல் - காவலர்; மற்றும் அவரது 4வயது மகன் பலி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கார் மோதியதில் பைக்கில்  சென்ற காவலர் மற்றும் அவரது 4வயது மகன் பரிதபமாக உயிரிழந்தனர். அவருடைய மனைவி, இன்னொரு மகன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜா மார்சல் (வயது 38). இவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தேவிகா (வயது 30), மகன்கள் ரஷ்வந்த் (வயது 6), ரிஷாந்த் (வயது 4), மகள் ரென்னிஷா (வயது 2).  ராஜாமார்சல் தனது குடும்பத்தினருடன் பைக்கில் கோவில்பட்டி திட்டங்குளம் தொழிற்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் துணி எடுக்க சென்றுள்ளார். துணியை எடுத்து விட்டு பைக்கில் தொழிற்பேட்டையில் இருந்து எட்டயபுரம் சாலையில் திரும்பும் போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு ராஜா மார்சல் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். சிறுமி ரென்னிஷா காயமின்றி தப்பினாள். அங்கிருந்தவர்கள் அந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிஷாந்த் உயிரிழந்தான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜா மார்சலை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த தேவிகா, இன்னொரு மகனான ரஷ்வந்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து, விளாத்திகுளம் பூமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சிவராமச்சந்திரனை (வயது 24) கைது செய்தார். விபத்தில் போலீஸ்காரர் தனது மகனுடன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Car collision on Kovilpatti bike - guard; And killed his 4-year-old son

Share via