சிசிடிவி காட்சிகளை வெளியிட சொல்லும் ஸ்வப்னா சுரேஷ்

by Editor / 30-06-2022 03:57:20pm
சிசிடிவி காட்சிகளை வெளியிட சொல்லும் ஸ்வப்னா சுரேஷ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கின் திருப்புமுனையாக, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மேலும் 2016ஆம் ஆண்டு துபாயில் பினரயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினரயி விஜயன், ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் உள்நோக்கம் கொண்டது, அரசியல் சூழ்ச்சி என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும், இவ்வாறு குற்றம் சுமத்துவதின் மூலம் உண்மை தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிட முடியாது என்று தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, பினரயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை மிரட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் ஸ்வப்னா சுரேஷ்.  இதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞர் சரித் கைது செய்யப்பட்டார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதால், அவர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஸ்வப்னா பணியாற்றும் தொண்டு நிறுவன அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் தனது பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் நியமித்துள்ளார்.இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ், சட்டப்பேரவையில் பினரயி விஜயன் பொய் சொன்னதாகவும், வழக்கின் விசாரணையை கருத்தில் கொண்டு கிளிஃப் ஹவுஸ் மற்றும் தலைமைச் செயலகத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via