தமிழகத்தில் மேலும் ஒரு வாரம்  ஊரடங்கை நீட்டிக்க  மருத்துவர்கள் குழு பரிந்துரை

by Editor / 04-06-2021 06:04:25pm
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம்  ஊரடங்கை நீட்டிக்க  மருத்துவர்கள் குழு பரிந்துரை



தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மாறி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று குறைய தொடங்கி உள்ளது.சென்னை நகரை பொறுத்தவரையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரம் வரை இருந்தது. இப்போது அது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதே போன்று குறைந்து வருகிறது.
கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வந்தது. கோவையை பொறுத்தவரையில் சென்னையையும் தாண்டி திடீரென கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது.
ஆனால் இப்போது அந்த மாவட்டங்களிலும் கணிசமாக குறைய தொடங்கியது. கோவையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2,900 ஆக குறைந்துள்ளது.தமிழகத்தில் நோய் பரவல் உச்சத்தில் இருந்தபோது தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அது தற்போது 24 ஆயிரமாக குறைந்துள்ளது. தினசரி உயிர் பலியை பொறுத்தவரையில் 400-ல் இருந்து 500 வரைக்கும் இருந்து வருகிறது. நேற்றும் 460 பேர் பலியாகி இருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? அல்லது நீடிக்க செய்யலாமா? என்பது குறித்து  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள நிலைமைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அதில் ஆலோசிக்கப்பட்ட விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக தெரிவித்தார்.கடந்த 24-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.எனவே 1-ந்தேதி மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 7-ந்தேதி காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், குறைவான பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via