இறந்த குழந்தை உயிருடன் வரும்.

by Editor / 20-08-2022 02:36:42pm
இறந்த குழந்தை உயிருடன் வரும்.

மத்திய பிரதேசம்: ரேவா மாவட்டம் பீடி கிராமத்தை சேர்ந்த 4 வயது குழந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உறவினரான அனிதா கௌல், தனது கனவில் கடவுள் குல்தேவி வந்ததாகவும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பிடி மண்ணை எடுத்து, ஒரு சிகப்பு துணியில் கட்டி, தன் பாதத்தில் வைத்து பூஜை செய்தால், குழந்தை மீண்டும் உயிர் பெறும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய கிராமத்தினர் குல்தேவி கோயிலில் தேவியின் பாதத்தில் எலும்பு ஒன்றை வைத்து தற்போது பூஜை செய்து வருகின்றனர். மண்ணை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று தானே கடவுள் கூறியது, எதற்கு எலும்பு? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த அக்கிராமத்தினர், "குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் அதிசயமாக பூவாக மாறியது. பின்பு சிறிது நேரத்தில் பூ எலும்பாக மாறியது" என்றனர்.

தற்போது, ஒரு கிராமமே, அந்த எலும்பு எப்போது குழந்தையாக மாறும் என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது, குல்தேவி தன்மீது இறங்கியிருப்பதாக கூறும் அனிதா செய்தியாளர்களை சந்தித்தார். திடீரென சாமி வந்தது போன்று கூச்சலிட்ட அவர், மீண்டும் குழந்தை உயிர் பெற்று வரும் என உரக்க கூறினார். அதற்கு இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் என கேட்டதற்கு, கோபப்பட்டு கத்திய அவர், வேறு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

 

Tags :

Share via
Logo