கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை  அமைச்சருக்கு  இந்து முன்னணி பாராட்டு 

by Editor / 08-06-2021 04:44:12pm
 கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை  அமைச்சருக்கு  இந்து முன்னணி பாராட்டு 

 

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடு பாராட்டுக்குரியது என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றவுடன் கோவில் நிலங்களை மீட்கு முயற்சி எடுத்து வருகிறார். அதேபோல கோயில் சொத்துக்கள், நிலங்கள், நகைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.சென்னை சாலிகிராமம், காந்திகிராமம் பகுதியில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் பெண்கள் விடுதி கட்டுவதற்கு குத்தகை விடப்பட்டது. அந்த இடத்தில் பல்வேறு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்தார்கள். குறிப்பாக சினிமா துறையினர் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது.இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முயற்சியில் இந்த இடம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கின்றது.ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலமும் மீட்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளதும், அதை நிரூபிக்கின்ற வகையில் அமைந்துள்ள அவரது செயல்பாடுகளையும் இந்துமுன்னணி மனதார வரவேற்கின்றது.தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சரியான வாடகை வசூல் செய்யப்படாமல் உள்ளது. போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்துள்ளார்கள்.இவற்றையெல்லாம் கவனித்து தக்க நடவடிக்கை எடுத்து ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ள கோயில்களில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via