ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி  தமிழ்நாடு அரசு உத்தரவு 

by Editor / 08-06-2021 08:44:33pm
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி  தமிழ்நாடு அரசு உத்தரவு 


ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், , 93 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோவும் வழங்கப்படுகிறது.
எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கிக் கொள்ளலாம்.
கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே, ஜூன் மாதங்களில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஒன்றிய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது.
உதாரணமாக ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து இரு மடங்கு அரிசி கிடைக்கும். மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி விநியோகம் ஜூலை மாதம் சேர்த்து வழங்கப்படும்.
எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப ஜூன் மாதம் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் ரேஷன் கடைகளில் உள்ள விளம்பரப் பலைகளில் விளம்பரப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via