சாதி சான்றிதழில் முறைகேடு செய்து எம்.பி. பதவி : தமிழ் பட  நடிகைமீதான வழக்கில் மேல்முறையீடு 

by Editor / 24-07-2021 04:40:53pm
சாதி சான்றிதழில் முறைகேடு செய்து எம்.பி. பதவி : தமிழ் பட  நடிகைமீதான வழக்கில் மேல்முறையீடு 

 

தமிழில், அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவ்நீத் கவுர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவான ரவி ராணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இதையடுத்து அந்த மாநிலத்தின், அமராவதி நாடாளுமன்ற தனித் தொகுதியில் கடந்த தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து வெற்றி பெற்றார். இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்தராவ், நவ்நீத் கவுர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக, மும்பை மாவட்ட சாதி சான்றிதழ்களை சரிபார்க்கும் கமிட்டியிடம் புகார் அளித்தார். ஆனால், அந்த கமிட்டி, நவ்நீத் கவுரின் சாதி சான்றிதழில் முறைகேடு ஏதுமில்லை எனக் கூறிவிட்டது.


இதையடுத்து அவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நவ்நீத் கவுரின் சாதி சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என தெரியவந்ததை அடுத்து அவருடைய சாதி சான்றிதழை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

ஆறு வாரங்களுக்குள் நவ்நீத் கவுர் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் நவ்னீத் கவுர், 'இதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக நினைக்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறேன். அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via