தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

by Editor / 31-05-2025 10:59:38am
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்தது. மேலும், தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாலும், கத்திரி வெயில் முடிவடைந்ததாலும், தமிழகத்தில் இனி மழை தொடரவிருக்கிறது.

இந்த நிலையில் இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நாளை முதல் மழை குறைந்து, லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share via