முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் நன்றி 

by Editor / 24-07-2021 07:48:42pm
 முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் நன்றி 

 

பெண் காவலர்கள் சாலையில் நிற்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவிலக்கு அளிக்கப்படும் என்று முதல்வரும் தமிழக டிஜிபி-யும் அறிவித்தனர். இந்த வரவேற்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்தார். தற்போது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: 
“பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது . படம் , குறிப்பாக வி.ஐ.பி க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.


சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்து வருவதை அறிந்தோம் . உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம். அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் பதினொன்றாம் தேதி , அத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடகூடின்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம். திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் மிக மிக அவசரம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது. இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.


“முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.


எந்த வலியை மிக மிக அவசரம் படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு, நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியை சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும் ?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via