கனிம வளம் கடத்திய டிரைவர் கைது

by Staff / 07-10-2022 04:13:23pm
 கனிம வளம் கடத்திய டிரைவர் கைது

தக்கலை சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே பள்ளியாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்கள் எடுத்து கடத்தப்படுவதாக தக்கலை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தாசில்தார் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிம வளம் கடத்த முயன்றதாக டிரைவர் விருதுநகர் தபசுலிங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே. சி. பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via