நடிகர் போண்டா மணியிடம் மோசடிசெய்து தலைமறைவான நபர் கைது
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி கடந்த மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி வந்தார். மருத்துவமனையில் போண்டா மணிக்கு சிறிய உதவிகளையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஸ் பிரித்தீவ்விடம் கொடுத்து மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
மருந்து வாங்கி வர ராஜேஸ் பிரித்தீவ் சென்ற சிறிது நேரத்தில் சென்னை உம்முடிபங்காரு நகைக் கடையிலிருந்து மாதவியின் செல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள நகை வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் பிரத்தீவ் தலைமறைவாகி விட்டார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து போண்டா மணி மனைவி போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று ராஜேஸ் பிரத்தீவ்வை கைது செய்தனர்.
Tags :