அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் தள்ளுபடி!

by Editor / 16-06-2021 11:19:09am
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் தள்ளுபடி!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணிகண்டனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது காவல் துறை தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கைது செய்வதற்கான தடை ஜூன் 9ஆம் தேதி முடிந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via