வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை

by Staff / 15-10-2022 12:36:05pm
வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில தொழிலாளி ஒடிசா மாநிலம் கோபிந்த்பூர் பகுதியை சேர்ந்தவர் கந்தப்பெகரா. இவருடைய மகன் துஷாபந்த் பெகரா (வயது 24). இவர் தூத்துக்குடி அருகே உள்ள கொம்புக்கார நத்தம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் புதுக்கோட்டை பாத்திமாநகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை 9. 30 மணிக்கு துஷாபந்த் பெகரா வீட்டில் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார். அடித்துக்கொலை இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் தலையில் காயம் இருந்ததால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, துஷாபந்த் பெகராவுடன் தங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அவரது நண்பரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via