வாலிபர் கழுத்தறுத்து கொலை

by Staff / 31-12-2022 04:13:46pm
வாலிபர் கழுத்தறுத்து கொலை

திருவெறும்பூர் அருகே வடைகடை உரிமையாளரிடம் கடனாக ரூ 4 லட்சம் பெற்றதை திரும்ப தராத கோழி கறி கடை ஊழியரை, வடை கடை உரிமையாளர் கை காலை கட்டி கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (எ)மீனாட்சி சுந்தர் (28). இவர் பர்மா காலனி சேர்ந்த வடைகடை உரிமையாளர் ராமன் (56) என்பவரிடம் ரூபாய் 4லட்சம் கடன் பெற்றதாகவும் , அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் சுந்தரால் கொடுக்க முடியவில்லை என்றுகூறப்படுகிறது.
இதனால் சுந்தருக்கும் ராமருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ராமன் தனது வடை கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 போட்டு வியாபாரம் செய்து அதன் மூலம் தனது கடனை அடைக்க சுந்தரிடம் கூறியதாகவும், அதன் அடிப்படையில் ராமனின் வடை கடையில் சுந்தர் சிக்கன் 65 வியாபாரம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுந்தர் கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமன், சுந்தரை பாலாஜிநகர் கவுற்றாற்று வாய்க்கால் பாலம் அருகே தனியாக அழைத்துச் சென்று மதுபானம் வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். பின்னர் சுந்தருக்கு போதை ஏறியதும் சுந்தரின் கை கால்களை கயிற்றில் கட்டி பின்னர் புதிதாக வாங்கி வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்து கொன்றதாக ராமன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்த சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராமனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via