தமிழகத்தில் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 04-11-2022 09:00:29am
தமிழகத்தில்   மாவட்டங்களில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலும், பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மதுரவாயல் ஆகிய நான்கு தாலுக்காகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர்நோக்கும் அதிக மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via