வீட்டின் அருகே வசிக்கும் பெண் திட்டியதால் 6ம் வகுப்பு மாணவி தற்கொலை

by Staff / 15-02-2023 05:25:55pm
வீட்டின் அருகே வசிக்கும் பெண் திட்டியதால் 6ம் வகுப்பு மாணவி தற்கொலை

குன்றத்தூரில் வீட்டின் அருகே குடியிருக்கும் பெண் திட்டியதாகக் கூறி 6ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் சிவா. ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு வைஷ்ணவி என்ற மகளும், நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், இரவு வீட்டிற்குச் சென்ற சிவா, வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது வைஷ்ணவி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வைஷ்ணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சென்ற போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அங்கு வசிக்கும் இளைஞருடன் பேசி வருவதாக வைஷ்ணவி அங்கிருந்தவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த இளைஞரின் பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்து அவரது பெற்றோர் வந்தால் தெரிவிப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தன்னை அந்த வீட்டில் இருந்த அக்கா திட்டியதாக வைஷ்ணவி தனது நோட்டில் எழுதி இருப்பதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவரது தாய் வசந்தி கூறுகையில் மேல் வீட்டில் வசிக்கும் செல்வி என்ற பெண் தனது மகளை திட்டியதாகவும் அதன் காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகளின் சாவில்  சந்தேகத்தை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via