இளம்பெண் கடத்தல் வழக்கில் தந்தை உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தென்காசி அருகே காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் வினித் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் பெற்றோர்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஜாமீன் கோரியும், தலைமறைவான கிருத்திகாவின் தந்தை உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணையின்போது ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பட்டப்பகலில் பொது இடத்தில் வீடு புகுந்து இளம் பெண்ணை கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். தலைமறைவாக உள்ள யாருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, கைது செய்யப்பட்டவர்களின் சிறைக் காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
Tags : இளம்பெண் கடத்தல் வழக்கில் தந்தை உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி