பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வில் 25ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை-அதிர்ச்சி தகவல்.

by Editor / 30-03-2023 08:27:21am
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வில் 25ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை-அதிர்ச்சி தகவல்.

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.

இதில் சுணக்கம் காட்டும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு அந்தந்த பள்ளிகளில் மார்ச் 20 முதல் 28-ம் தேதி வரை நடத்தி முடிக்கவேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது செய்முறை தேர்வுக்கான அவகாசம் மார்ச் 31-ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை.இந்த சூழலில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்விலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்காதது சர்ச்சையாகி உள்ளது. 

 

Tags :

Share via