நடிகர் தனுஷ்  மற்றும் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம் 

by Editor / 10-04-2023 08:23:51am
நடிகர் தனுஷ்  மற்றும் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம் 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு  இன்று மாலைவெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ்  திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட்டை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும்  இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில்  ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்  நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. மேலும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்  சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

 

Tags :

Share via