ஹோட்டலில் இருந்த பெண் உரிமையாளரிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறு 3 பேர் கைது

by Admin / 01-08-2023 11:56:15am
 ஹோட்டலில் இருந்த பெண் உரிமையாளரிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறு 3 பேர் கைது

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் ஹோட்டலில் ரகளை ஈடுபட்ட 6 பேர்கள் மீது வழக்கு பதிந்து 3 பேர்களை புதூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  உள்ள கீழக்கரந்தையைச் சேர்ந்த ராமர் மற்றும் அவரது நண்பர் திருமேனி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு புதூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு உண்ண சென்றுள்ளனர்.

இருவரும் சோ்ந்து 10 ஆம்லெட் சாப்பிட்டு விட்டு 5 ஆம்லெட் தான் சாப்பிட்டோம் என்று கூறி ஹோட்டலில் இருந்த பெண் உரிமையாளரிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ராமர் மற்றும் திருமேனி ஆகிய இருவரும் தொலைபேசியில் அழைத்ததன் பேரில் கீழக்கரந்தை வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மாரீஸ்வரன் (26), ராமர் (24), நடுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் பிரவீன்ராஜ் (27) ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து ஹோட்டலில் உள்ள பொருட்களை சாலையில் இழுத்து போட்டு தகராறு ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கே ஹோட்டல் அருகில் நின்று கொண்டிருந்த எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (48), நல்லதம்பி (50), சரவணன் (45) ஆகியோர் ஹோட்டலில் ரகளை ஈடுபட்டவர்களிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர் அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் செங்கற்களால் மாற்றி மாற்றி தாக்கி கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மாரீஸ்வரன், ராமர் ஆகிய இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பிரவீன்ராஜ் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவா் மீது ஆபாசமாக பேசி பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கப்பாண்டி,நல்லதம்பி, சரவணன் ஆகியவர் மூவா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்ட3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக புதூர் காவல் நிலைய போலீசார் துணை ஆய்வாளர் விநாயகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

Tags :

Share via