ரேஷன் அரிசியில் வரப்போகுது மாற்றம்

by Staff / 13-04-2023 03:21:34pm
ரேஷன் அரிசியில் வரப்போகுது மாற்றம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு தந்துள்ள நிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்போது, தினசரி உணவில் செயற்கை சத்துகளைச் சேர்த்து தந்தால், மக்கள் பயன்பெற முடியும் என்று செயற்கை ஊட்டமேற்றிய உணவில் சமீபகாலமாக முனைப்புக் காட்டி வருகிறது இந்திய அரசு.இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இரும்புச்சத்து: இந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி கிடையாது. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன. அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியை பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரிசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும்.

இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அந்தவகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. சமீபத்தில், தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த திட்டம் குறித்து விரிவாகவே கூறியிருந்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி: இப்போது செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து பெற்று, பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கியும் வருகிறது. முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ம் கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது.

அடுத்ததாக ரேசன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7. 5 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் எஸ் ஜானகியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில், ஜூலை முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்ய, தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த 2020-ல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவக்கப்பட்ட நிலையில், 2022 டிசம்பர் முதல் விருதுநகர், ராமநாதபுரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுதும் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும், இம்மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரிசி ஆலைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கும் பணி முடியாததால், ஜூலை முதல் வினியோகம் செய்ய, மத்திய அரசிடம் அனுமதி கேடகப்பட்டது. தற்போது அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, தமிழகத்தில் 96 லட்சம் முன்னுரிமை மற்றும் 18. 65 லட்சம் அந்தியோதயா கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மட்டும் மாதம் 2. 97 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இந்த மாதம் முதல், சில மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்படும். பிறகு, மே, ஜூன், ஜூலையில் அனைத்து மாவட்ட மாவட்டங்களிலும் முழுதுமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via